• Jun 30 2026

அரசாங்கத்தின் தவறான கொள்கைகளால் மக்கள் பெரும் பாதிப்பு: திஸ்ஸ அத்தநாயக்க குற்றச்சாட்டு!

shanu / Jun 30th 2026, 5:44 pm
image

தற்போதைய அரசாங்கத்தின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவம் மற்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றாமை காரணமாக நாட்டின் விவசாயிகள், சிறு மற்றும் நடுத்தர தொழிலதிபர்கள் மற்றும் பொது மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். 


இன்று எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமை  அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், தேர்தல் காலத்தில் ஒரு கிலோ நெல்லுக்கு 140 ரூபாய் குறைந்தபட்ச விலை வழங்குவதாக தேசிய மக்கள் சக்தி உறுதியளித்த போதிலும், இன்று ஒரு கிலோ நெல்லை 100 ரூபாய்க்குக் கூட கொள்வனவு செய்ய அரசாங்கம் முன்வரவில்லை எனக் குற்றம் சாட்டினார். 


இதனால் ரஜரட்ட உள்ளிட்ட பல பகுதிகளில் நெல் விவசாயிகள் வீதியில் இறங்கி போராடத் தொடங்கியுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் நெல் கொள்வனவு செய்யப்படும் என அரசாங்கம் கூறினாலும் கடந்த சில போகங்களாக அரசாங்கத்தின் தலையீடு மிகக் குறைவாகவே உள்ளதால், தனியார் வர்த்தகர்கள் மிகக் குறைந்த விலைக்கு நெல்லைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் வழிவகுத்துள்ளதாகத் தெரிவித்தார். 


எனவே, தேர்தல் வாக்குறுதியின்படி விவசாயிகளின் நெல்லை நியாயமான விலைக்கு கொள்வனவு செய்ய வேண்டும் என்றும், தேவையான உரம் மற்றும் இரசாயனப் பொருட்களை முறையாக வழங்க வேண்டும் என்றும் அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.


நாட்டின் விவசாயிகளிடம் இருந்து நெல்லைக் கொள்வனவு செய்யாத அரசாங்கம், வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதியை 40 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்த திஸ்ஸ அத்தநாயக்க, அரிசி இறக்குமதியை செய்ய மாட்டோம் என விவசாய மற்றும் வர்த்தக அமைச்சர்கள் கூறினாலும் நடைமுறையில் பெருமளவில் அரிசி இறக்குமதி செய்யப்படுவதாகக் குறிப்பிட்டார். 


நாட்டில் அரிசித் பற்றாக்குறை இருந்தால் இறக்குமதி செய்வதில் தவறில்லை என்றும், ஆனால் அரசாங்கத்தின் நெருங்கிய ஆதரவாளர்களை பணக்காரர்களாக்குவதற்காகவே இந்த இறக்குமதி அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சாடினார். 


மேலும், வெளிநாட்டு அரிசி உபரியாக உள்ளதால் அதனை அரச ஊழியர்களுக்கு தவணை முறையில் 20 கிலோ வீதம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், அரசாங்கத்தின் இந்த திறமையற்ற தன்மையை வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறினார். அத்துடன், வனவிலங்குகளால் (குரங்குகளால்) ஏற்படும் பயிர்ச் சேதங்களுக்கு முறையான விஞ்ஞானப்பூர்வ தீர்வைக் காணவும் அரசாங்கம் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.


நாட்டின் பொருளாதார வீழ்ச்சியைக் கருத்திற்கொண்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 'பராட்டே சட்டம்' (Parate Execution Law) தற்போது வங்கிகளால் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தீவிர கோரிக்கைக்கு அமைவாகவே இது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது என்பதை நினைவூட்டினார். 


நாட்டின் வருமானத்திற்கும் வேலைவாய்ப்புக்கும் முக்கிய பங்களிப்பு வழங்கும் சிறு மற்றும் நடுத்தர தொழிலதிபர்கள் மீண்டெழுவதற்கு அரச மற்றும் தனியார் வங்கிகள் அவகாசம் வழங்க வேண்டும் என்றும், அதை விடுத்து வங்கிகள் இந்தச் சட்டத்தை மீண்டும் கடுமையாகப் பயன்படுத்தினால் ஆயிரக்கணக்கான வணிகங்கள் அழிந்து நாட்டின் பொருளாதாரத்திற்குப் பாரிய பாதிப்பு ஏற்படும் என்பதால் அரசாங்கம் இதில் உடனடியாகத் தலையிட்டு தொழிலதிபர்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.


நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50,000 ஆக உயர்ந்துள்ளதுடன் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்த அவர், டெங்குவை ஒழிப்பதில் அரசாங்கம், மாகாண சபைகள் மற்றும் சுகாதாரப் பிரிவினரின் செயல்பாடுகள் எவ்விதத்திலும் திருப்திகரமாக இல்லை என்றும், அரசு மருத்துவமனைகள் டெங்கு நோயாளர்களால் நிரம்பி வழிவதோடு சுகாதாரக் கட்டமைப்பு இதனைத் தாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார். 


கடந்த அரசாங்கங்களின் தவறான கொள்கைகளே இதற்குக் காரணம் என தற்போதைய அமைச்சர்கள் தட்டிக்கழிக்கக் கூடாது எனச் சுட்டிக்காட்டிய அவர், கடந்த அரசாங்கங்கள் தவறிழைத்திருந்தால் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதனைச் சரியாகச் செய்து காட்ட வேண்டும் என்றும், வெற்றுப் பெருமைகளைப் பேசுவதை நிறுத்திவிட்டு உள்ளூராட்சி அமைப்புகளைக் கொண்டு டெங்குவை ஒழிக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.


அதேவேளை, நாட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்திருந்தாலும் அவர்களிடமிருந்து கிடைக்கும் வெளிநாட்டு வருமானம் குறைந்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். அதன்படி, 2025 ஆம் ஆண்டில் 1503 மில்லியன் டாலராக இருந்த சுற்றுலா வருமானம், 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 1360 மில்லியன் டாலராக வீழ்ச்சியடைந்துள்ளது என்றும், அதிக பணம் செலவழிக்கக்கூடிய வசதி படைத்த சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கான முறையான ஊக்குவிப்புத் திட்டங்கள் அரசாங்கத்திடம் இல்லை என்பதை இது காட்டுவதாகவும் தெரிவித்தார்.


இறுதியாக எரிபொருள் விலை திருத்தம் குறித்து கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கம் எரிபொருள் விலையை 20 ரூபாயால் குறைத்துள்ள போதிலும் கடந்த காலங்களில் பெருமளவில் விலையை உயர்த்தியிருந்ததாகக் குறிப்பிட்டார். 


தற்போது உலக சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 70 முதல் 80 டாலருக்கும் குறைவாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், அந்தப் பலனை மக்களுக்கு முழுமையாக வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார். 


விலைச்சூத்திரம் தேவையில்லை என்றும், துறைமுகத்திற்கு கொண்டு வரப்படும் விலைக்கே எரிபொருள் வழங்கப்படும் என்றும் அரசாங்கம் முன்பு கூறியிருந்ததை நினைவுபடுத்திய திஸ்ஸ அத்தநாயக்க, தற்போதைய உலக சந்தை நிலவரப்படி எரிபொருளை பழைய குறைந்த விலைக்கே மக்களுக்கு வழங்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் தவறான கொள்கைகளால் மக்கள் பெரும் பாதிப்பு: திஸ்ஸ அத்தநாயக்க குற்றச்சாட்டு தற்போதைய அரசாங்கத்தின் முறையற்ற பொருளாதார முகாமைத்துவம் மற்றும் வாக்குறுதிகளை நிறைவேற்றாமை காரணமாக நாட்டின் விவசாயிகள், சிறு மற்றும் நடுத்தர தொழிலதிபர்கள் மற்றும் பொது மக்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். இன்று எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமை  அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், தேர்தல் காலத்தில் ஒரு கிலோ நெல்லுக்கு 140 ரூபாய் குறைந்தபட்ச விலை வழங்குவதாக தேசிய மக்கள் சக்தி உறுதியளித்த போதிலும், இன்று ஒரு கிலோ நெல்லை 100 ரூபாய்க்குக் கூட கொள்வனவு செய்ய அரசாங்கம் முன்வரவில்லை எனக் குற்றம் சாட்டினார். இதனால் ரஜரட்ட உள்ளிட்ட பல பகுதிகளில் நெல் விவசாயிகள் வீதியில் இறங்கி போராடத் தொடங்கியுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் நெல் கொள்வனவு செய்யப்படும் என அரசாங்கம் கூறினாலும் கடந்த சில போகங்களாக அரசாங்கத்தின் தலையீடு மிகக் குறைவாகவே உள்ளதால், தனியார் வர்த்தகர்கள் மிகக் குறைந்த விலைக்கு நெல்லைக் கொள்வனவு செய்ய அரசாங்கம் வழிவகுத்துள்ளதாகத் தெரிவித்தார். எனவே, தேர்தல் வாக்குறுதியின்படி விவசாயிகளின் நெல்லை நியாயமான விலைக்கு கொள்வனவு செய்ய வேண்டும் என்றும், தேவையான உரம் மற்றும் இரசாயனப் பொருட்களை முறையாக வழங்க வேண்டும் என்றும் அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.நாட்டின் விவசாயிகளிடம் இருந்து நெல்லைக் கொள்வனவு செய்யாத அரசாங்கம், வெளிநாடுகளில் இருந்து அரிசி இறக்குமதியை 40 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்த திஸ்ஸ அத்தநாயக்க, அரிசி இறக்குமதியை செய்ய மாட்டோம் என விவசாய மற்றும் வர்த்தக அமைச்சர்கள் கூறினாலும் நடைமுறையில் பெருமளவில் அரிசி இறக்குமதி செய்யப்படுவதாகக் குறிப்பிட்டார். நாட்டில் அரிசித் பற்றாக்குறை இருந்தால் இறக்குமதி செய்வதில் தவறில்லை என்றும், ஆனால் அரசாங்கத்தின் நெருங்கிய ஆதரவாளர்களை பணக்காரர்களாக்குவதற்காகவே இந்த இறக்குமதி அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சாடினார். மேலும், வெளிநாட்டு அரிசி உபரியாக உள்ளதால் அதனை அரச ஊழியர்களுக்கு தவணை முறையில் 20 கிலோ வீதம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், அரசாங்கத்தின் இந்த திறமையற்ற தன்மையை வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறினார். அத்துடன், வனவிலங்குகளால் (குரங்குகளால்) ஏற்படும் பயிர்ச் சேதங்களுக்கு முறையான விஞ்ஞானப்பூர்வ தீர்வைக் காணவும் அரசாங்கம் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டினார்.நாட்டின் பொருளாதார வீழ்ச்சியைக் கருத்திற்கொண்டு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 'பராட்டே சட்டம்' (Parate Execution Law) தற்போது வங்கிகளால் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தீவிர கோரிக்கைக்கு அமைவாகவே இது தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது என்பதை நினைவூட்டினார். நாட்டின் வருமானத்திற்கும் வேலைவாய்ப்புக்கும் முக்கிய பங்களிப்பு வழங்கும் சிறு மற்றும் நடுத்தர தொழிலதிபர்கள் மீண்டெழுவதற்கு அரச மற்றும் தனியார் வங்கிகள் அவகாசம் வழங்க வேண்டும் என்றும், அதை விடுத்து வங்கிகள் இந்தச் சட்டத்தை மீண்டும் கடுமையாகப் பயன்படுத்தினால் ஆயிரக்கணக்கான வணிகங்கள் அழிந்து நாட்டின் பொருளாதாரத்திற்குப் பாரிய பாதிப்பு ஏற்படும் என்பதால் அரசாங்கம் இதில் உடனடியாகத் தலையிட்டு தொழிலதிபர்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50,000 ஆக உயர்ந்துள்ளதுடன் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவித்த அவர், டெங்குவை ஒழிப்பதில் அரசாங்கம், மாகாண சபைகள் மற்றும் சுகாதாரப் பிரிவினரின் செயல்பாடுகள் எவ்விதத்திலும் திருப்திகரமாக இல்லை என்றும், அரசு மருத்துவமனைகள் டெங்கு நோயாளர்களால் நிரம்பி வழிவதோடு சுகாதாரக் கட்டமைப்பு இதனைத் தாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் கூறினார். கடந்த அரசாங்கங்களின் தவறான கொள்கைகளே இதற்குக் காரணம் என தற்போதைய அமைச்சர்கள் தட்டிக்கழிக்கக் கூடாது எனச் சுட்டிக்காட்டிய அவர், கடந்த அரசாங்கங்கள் தவறிழைத்திருந்தால் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதனைச் சரியாகச் செய்து காட்ட வேண்டும் என்றும், வெற்றுப் பெருமைகளைப் பேசுவதை நிறுத்திவிட்டு உள்ளூராட்சி அமைப்புகளைக் கொண்டு டெங்குவை ஒழிக்க அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.அதேவேளை, நாட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்திருந்தாலும் அவர்களிடமிருந்து கிடைக்கும் வெளிநாட்டு வருமானம் குறைந்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். அதன்படி, 2025 ஆம் ஆண்டில் 1503 மில்லியன் டாலராக இருந்த சுற்றுலா வருமானம், 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 1360 மில்லியன் டாலராக வீழ்ச்சியடைந்துள்ளது என்றும், அதிக பணம் செலவழிக்கக்கூடிய வசதி படைத்த சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கான முறையான ஊக்குவிப்புத் திட்டங்கள் அரசாங்கத்திடம் இல்லை என்பதை இது காட்டுவதாகவும் தெரிவித்தார்.இறுதியாக எரிபொருள் விலை திருத்தம் குறித்து கருத்து வெளியிட்ட அவர், அரசாங்கம் எரிபொருள் விலையை 20 ரூபாயால் குறைத்துள்ள போதிலும் கடந்த காலங்களில் பெருமளவில் விலையை உயர்த்தியிருந்ததாகக் குறிப்பிட்டார். தற்போது உலக சந்தையில் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 70 முதல் 80 டாலருக்கும் குறைவாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், அந்தப் பலனை மக்களுக்கு முழுமையாக வழங்க வேண்டும் எனத் தெரிவித்தார். விலைச்சூத்திரம் தேவையில்லை என்றும், துறைமுகத்திற்கு கொண்டு வரப்படும் விலைக்கே எரிபொருள் வழங்கப்படும் என்றும் அரசாங்கம் முன்பு கூறியிருந்ததை நினைவுபடுத்திய திஸ்ஸ அத்தநாயக்க, தற்போதைய உலக சந்தை நிலவரப்படி எரிபொருளை பழைய குறைந்த விலைக்கே மக்களுக்கு வழங்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement